கவிதை எழுத வேண்டும்
கடைசி கவிதை சோகமாய் இருப்பதாய் நண்பன் சொன்னான்
காதல் கவிதை அதிகம் எழுதினால்
காதலி யார் என்ற கேள்வி வரும்
இலங்கை தமிழன் பற்றி எழுத
நான் என்ன தன்மான சிங்கமா
நான் பச்சை தமிழன்
அரசியில் கவிதை எழுத ஆரம்பித்து
பின்பு அரசியிலில் என்ன கவிதை வேண்டிக்கிடக்கிறது
என்று எழுதின பக்கத்தை கிழித்தேன்
மழை
பேருந்து அழகி
நிலவு
பல் குத்தும் தாத்தா
பசி , பிள்ளை சிரிப்பு எல்லாம் தவிர்த்து
அரை மணி நேரம் “எது கவிதை ” என்று ஆரம்பித்த
வெறும் பக்கத்தை பார்த்து கொண்டே
அப்படியே தூங்கிப்போனேன்
“ஏன்டா 3 மாசம் வாடக பாக்கி
உனக்கு கவித ஒரு கேடா”
திட்டி எழுப்பினார் வீட்டுக்காரர்
தலைப்பு கிடைத்து விட்டது !!
